×
 

புதிய உச்சம் தொட்டது மின்சார வாகனங்கள் புக்கிங்!! மார்ச் மாத விற்பனை அமோகம்! முக்கிய காரணங்கள் அலசல்?!

மார்ச் மாதத்தில் மின்வாகன புக்கிங் அதிக அளவு நடந்து சாதனை படைத்து இருக்கிறது; இதற்கு பெட்ரோல், டீசல் விநியோக அச்சம் மற்றும் விலை உயர்வு ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மின்வாகனங்கள் (EV) பதிவு சாதனை அளவில் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டு, பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் தெரிவதால் மக்கள் மின்வாகனங்கள் நோக்கி திரும்பியுள்ளனர்.

ஆர்டிஓ அலுவலக பதிவு தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 27,412 மின்வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்தில் ஒரு பங்கு நான்கு சக்கர வாகனங்களாகவும், மீதமுள்ளவை இருசக்கர வாகனங்களாகவும் உள்ளன. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டு அதே மாதத்தில் 14,239 மின்வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.

2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மின்வாகன பதிவுகள் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. ஜனவரியில் 18,331, பிப்ரவரியில் 17,873 ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 27,412 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் முன்பதிவு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜனவரியில் 2,40,623 ஆக இருந்த பதிவுகள் பிப்ரவரியில் 2,18,396 ஆகவும், மார்ச் மாதத்தில் 2,01,754 ஆகவும் குறைந்துள்ளன.

இதையும் படிங்க: பாக்கெட்ல வெங்காயம் வெச்சுக்கோங்க..! விசித்திர அட்வைஸ் கொடுத்த மத்திய அமைச்சர்..!

வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கூறுகையில், “தற்போதைய எரிபொருள் விநியோக அச்சமும், விலை உயர்வும் மக்களை மின்வாகனங்கள் நோக்கி திருப்பியுள்ளன. சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக பெண்கள், பள்ளி விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற குறுகிய தூர பயணங்களுக்கு மின்வாகனங்களை விரும்பி தேர்வு செய்கின்றனர்” என்றனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் கோடைக்காலத்தை முன்னிட்டு பல மின்வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளனர். இந்த சலுகைகளும் மின்வாகன பதிவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் மின்வாகனங்கள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் தொடர்ந்தால், அடுத்த மாதங்களிலும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு மக்கள் மின்வாகனங்களை நோக்கி நகர்வது வரவேற்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் அரசு தாவரவியல் பூங்கா..!! பூக்களால் நிரம்பி வழியப்போகும் ஊட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share