கள்ளநோட்டு அடிப்பதற்காக 40 கட்டு ப்ளாக் பேப்பர்ஸ்?.... சென்னை மருத்துவர் வீட்டில் சிக்கியது எப்படி?
சென்னையில் மருத்துவர் வீட்டில் கருப்பு நிற தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் கைது
சென்னையில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் ரூபாய் நோட்டுகளின் அளவிலான கருப்பு நிற தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மருத்துவர் ஒருவரின் வீட்டில், கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் கருப்பு நிற தாள்கள் 40 கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் தற்போது தமிழரசி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மருத்துவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த நிலையில், அந்த வீட்டில் குடியிருந்தவர்கள்தான் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.... சிக்கிய தவெக நிர்வாகி சிறையில் அடைப்பு... நீதிமன்ற காவல்..!
குறிப்பாக, இந்த கருப்பு நிற தாள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன, இதற்கு முன்பு இதுபோன்ற மோசடி சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா, இந்த தாள்கள் கள்ளநோட்டு தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைக்காக வைத்திருந்தனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு, ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கருப்பு நிற தாள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மருத்துவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவர் அங்கு இல்லாததுடன், வீடு பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டை திறந்து முழுமையாக சோதனையிட்ட போலீசார், அலுமினிய சூட்கேஸில் ரூபாய் நோட்டுகளின் அளவிலான, அச்சிடப்படாத கருப்பு நிற தாள்கள் 40 கட்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு நிற தாள்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமிழரசி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது எப்படி, அவர்களுக்கு பின்னால் வேறு யார் யார் உள்ளனர், இந்தச் சம்பவத்துக்கு தொடர்புடையவர்கள் இன்னும் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய 6 பேர் சஸ்பெண்ட்..! சென்னை கார்ப்பரேஷனில் Action Mode..!