நக்சல் ஒழிப்புக்கு கைமேல் பலன்!! முதல்முறை கிடைத்தது மின்சாரம்!! மகிழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநில மக்கள்!
நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், முதன்முறையாக மின்சார வசதியைப் பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் (நக்சல்) ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. அடர்ந்த காடுகள், சாலை இல்லாத சவாலான பாதைகள், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அரசு அதிகாரிகள், மின்சார வாரிய ஊழியர்கள் எவரும் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் இருளில் மூழ்கி, மின்சாரம் இல்லாமல், சாலை இல்லாமல், மருத்துவம் இல்லாமல் கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தனர்.
ஆனால் இப்போது அந்த கிராமத்துக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல் ஆதிக்கம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.எப். (CRPF) படையினர் முகாம் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ததால், வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.
கடந்த சில நாட்களில் CRPF வீரர்களின் உதவியுடன், அடர்ந்த காடுகளுக்கு நடுவே மின் கம்பங்கள் நிறுவப்பட்டன. கடினமான நிலப்பரப்பில் கம்பிகள் இழுக்கப்பட்டு, கிராமத்தின் வீடுகள், பொது இடங்கள் என அனைத்துக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!
இதனால் கோகுண்டா கிராமம் முதன்முறையாக மின்சார ஒளியைப் பெற்றுள்ளது. இரவு நேரத்தில் விளக்குகள் எரியத் தொடங்கியதும், கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
சமீபத்தில் கிராமத்தில் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மாவோயிஸ்டுகள் அமைத்த நினைவிடங்கள் அகற்றப்பட்டன. மின்சார வசதி கிடைத்ததால், கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் இப்போது தான் அரசின் உண்மையான பயன்களை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
கிராமவாசிகள் உணர்ச்சி பொங்க கூறியதாவது: "முன்பு இருளில் வாழ்ந்தோம். நக்சல்கள் பயத்தால் அரசு யாரும் வரவில்லை. இப்போது CRPF முகாம் வந்த பிறகு நக்சல் ஆதிக்கம் முடிந்தது. சாலை, குடிநீர், மின்சாரம் வந்துவிட்டது. எங்கள் குழந்தைகள் படிக்கலாம், நோய்க்கு உதவி கிடைக்கும். இது எங்களுக்கு புது வாழ்க்கை!"
சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்பு பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அரசின் நம்பிக்கையும் வலுப்பெறுகிறது. கோகுண்டா கிராமத்தின் இந்த மாற்றம், நக்சல் பிரச்சினைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியின் அடையாளமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதி எங்கிருந்தாலும் கதைமுடிப்பு! காஷ்மீர் முதல் குமரி வரை பறக்கும் ஆர்டர்! PRAHAAR Policy!!