விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று மடுத்து வந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை அவரது அறையில் சந்தித்துப் பேசினார். அப்போது, தனது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைச் சபாநாயகரிடம் அவர் நேரடியாக வழங்கினார். அவரது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக்கொண்டதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் தவெக-வில் இணையப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ மற்றும் கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெக-வில் இணையப் போவதாக எழுந்த செய்திகளுக்குத் தங்களது மறுப்பைத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்திருந்தனர்.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது எம்எல்ஏ பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளாரா அல்லது அதிமுகவிலிருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!