கலாமுடன் பணியாற்றிய முத்துவின் மறைவு வருத்தமளிக்கிறது.. முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்துவின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளரும், கவிஞருமான சு. முத்து திருநெல்வேலியில் 1951ம் ஆண்டு மே 10ம் தேதி பிறந்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும் பணியாற்றிய இவர், ‘ஓல்ஃபெக்ஸ்’ என்ற தீயணைப்புப் பொடியைக் கண்டுபிடித்த குழுவில் உறுப்பினராக இருந்து இந்தியப் பதிவு உரிமம் பெற்றவர்.
அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகிய துறைகளில் 160-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இவருக்கு, அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு, ஐன்ஸ்டீனும் அண்டவெளியும், செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும், அறிவியல் ஆத்திசூடி ஆகிய 4 நூல்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!
மேலும் இவர் மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் கவிமாமணி விருது, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் 2004-ஆம் ஆண்டு விருது, பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகாகவி பாரதி அய்ந்தமிழ் விருது, பால் மருதுவர் ஜி. சிற்றம்பலநார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
நெல்லை சு. முத்து எழுதிய “விண்வெளியில் மருத்துவ ஆராய்ச்சி”, “செவ்வாய்க் கிரக நிலையை மாற்ற இயலுமா?” போன்ற கட்டுரைகள் தினமணி இதழில் வெளியாகின. மேலும் தமிழில் அறிவியல் குறிப்புகள் புதைந்துள்ளன என்பதை வலியுறுத்தி, புராணங்களில் உள்ள விமானக் குறிப்புகள், சூரியனை கோள்கள் சுற்றுதல் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என நெல்லை சு. முத்துவைப் பாராட்டினார். மேலும் இவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர்.
இந்நிலையில் நெல்லை சு. முத்து, உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;
“இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன்.
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, தமிழ்மொழிக்கு வளம் சேர்த்து வாழ்ந்து மறைந்துள்ள திரு. நெல்லை சு.முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் 4வது முறையாக ஒத்திவைப்பு..