ஆட்சி மாறினாலும் கஞ்சா புழக்கம் குறையவில்லை! எண்ணூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம்!
சென்னை எண்ணூரில் கஞ்சா போதையில் தம்பதியினர் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள பாஜக தலைவர் வானதி சீனிவாசன், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் எள்ளளவும் குறையவில்லை என்று தவெக அரசைச் சாடியுள்ளார்.
சென்னை எண்ணூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் வீடு புகுந்து தம்பதியரை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கும்பல் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து, பயன்படுத்தி வந்ததை பாதிக்கப்பட்ட தம்பதியர் தட்டிக்கேட்டதால், அவர்கள் மீது இந்த கொலைவெறித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மற்றும் காட்சிகள் மாறினாலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் புழக்கம் எள்ளளவும் குறையவில்லை என்பதற்கு இது போன்ற தொடர் சம்பவங்களே சாட்சி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் ஆமை வேகத்தில் நகர்வது தற்போதைய அரசின் நிர்வாகத் தோல்விக்கான ஆரம்பப் புள்ளி என்றும் அவர் விவரித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு திட்டங்களை தொடங்க கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உரிமை உள்ளது? தவெக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கூட போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகரித்து வருவது சாமானிய மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது சட்டம் பாய வேண்டும் என்றும், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கை முழுமையாக ஒழிக்க அரசு உடனடியாகத் தீவிரமான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!