"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வழங்கப்பட்ட டென்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பான டெண்டர் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது.
தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்த இந்த திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும் தாய்களையும் கௌரவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் வழங்கப்படும். இதற்காக சுமார் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் டெண்டர் கோரியது. 11 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் செய்கூலி, ஹால்மார்க், காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட கூடுதல் செலவுகளுக்கு வெறும் ஒரு பைசா மட்டும் விலைப்புள்ளி அளித்து குறைந்த விலையில் தேர்வானது. பின்னர் அதே விலையை ஏற்றுக்கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 70:30 விகிதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது.
தங்கத்தின் விலை சந்தை விகிதத்தில் அரசால் வழங்கப்படும் என்றும் கூடுதல் செலவுகள் மட்டுமே டெண்டர் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்றும் அரசு தெரிவித்தது.இந்த டெண்டரை எதிர்த்து பொற்கொல்லர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது வாதத்தில், மோதிரங்களை தயாரித்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் நிபந்தனைகள் உள்ளன. ஹால்மார்க் செய்வதற்கு மட்டும் ஒரு நகைக்கு சுமார் 45 ரூபாய் செலவாகும் நிலையில், லட்சக்கணக்கான மோதிரங்களை வெறும் சில ஆயிரம் ரூபாய்க்கு வழங்குவதாக கூறியது வணிக ரீதியாக சாத்தியமற்றது என வாதிட்டார். இதனால் தரமற்ற நகைகள் வழங்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தங்க நகை தொழில் குறித்து போதிய அறிவு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!
டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டபின் குறுக்கிட்டு, திட்டத்தையோ டெண்டர் நடைமுறையையோ எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றாலும், ஏற்கனவே வழங்கப்பட்ட டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனத் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு நிதிச் சேமிப்பு ஏற்படும் என்றும், நிறுவனத்திடம் போதிய தங்க இருப்பு இருப்பதால் குறைந்த விலையை மேற்கோள் காட்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டனர். நகைகள் தரமற்றதாக இருந்தால் அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இறுதியில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!