வழக்கறிஞர் நியமன சர்ச்சை..! ரூ.12 லட்சம் டீல்... தவெக நிர்வாகியின் அதிர வைக்கும் ஆடியோ..!!
வழக்கறிஞர் நியமனத்திற்கு பேரம் பேசும் தமிழக வெற்றி கழக நிர்வாகியின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அதிகாரிகள் நியமனத்தில் எழுந்த சர்ச்சை கட்சியின் உள்விவகாரங்களையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் ஒருங்கே எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. புதிய அரசு தனது சட்டத் துறை அமைப்பை வலுப்படுத்த முயன்றபோதே, இந்தப் பிரச்சினை முன்னுக்கு வந்தது. தவெக ஆட்சி அமைந்த உடனேயே, மாநிலத்தின் உயர் சட்டப் பதவிகளில் சில முக்கிய நியமனங்கள் நடைபெற்றன.
அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னணியில், கட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்து உழைத்த தவெக வழக்கறிஞர் அணியினர் புறக்கணிக்கப்படுவதாக உள்ளார்ந்த அதிருப்தி எழுந்தது. இந்தச் சூழலில், மாவட்ட அளவில் அரசு வழக்கறிஞர், சிறப்பு வழக்கறிஞர், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் பரிசீலனையில் இருந்தன. இதில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
விழுப்புரம் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஒரு அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஐந்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: வேளச்சேரியில் துப்பாக்கி சூடுதல் போட்டி..! குறிப்பார்த்த அமைச்சர் ஆதவ்..! இளம் வீரர்கள் உற்சாகம்..!!
அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேரம் பேசிய ஆடியோ வெளியாகியது. கன்னியாகுமரி மதியம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் அனீஸ் பேரம் பேசியுள்ளார். பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இறுதியாக 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வழக்கறிஞராக நியமனம் ஆகலாம் என்று அனீஸ் அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!