பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக ஆளுநர் உரை... சட்டப்பேரவையில் புதிய அத்தியாயம்..!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் எனக் கூறி ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவர தமிழக வெற்றிக் கழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என்றார். மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என்று தெரிவித்தார். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக்கான அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய அவர், போதைப் பொருளை ஒழிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றும் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு அழகு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையையும் தடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கள்ளச் சந்தையில் மது விற்பதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஆளுநர், தமிழகத்தில் கோவில்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் காவிரி நீரை பெற தொடர்ந்து போராட வேண்டியுள்ளது என்று கூறியுள்ள அவர் தமிழக அரசு தொடர்ந்து போராடி காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் நடந்து வந்த கனிமவளக் கொள்ளை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ஆளுநர் தமிழகத்தில் கனிம வளங்கள் கடத்தல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் உறுதியுடன் கூறியுள்ளார். மேகதாது விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தனது உரையின் தொடக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் பேச்சை சுட்டி காட்டினார். எம்ஜிஆரை குறிப்பிட்டு முதல்வர் விஜய் பற்றி பெருமையுடன் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: தயவு தாட்சண்யமின்றி சாட்டையை சுழற்ற வேண்டும்!! திமுக தலைமைக்கு நிர்வாகிகள் கோரிக்கை! ஸ்டாலின் ஷாக்!