ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் இளம் தம்பதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வீட்டில் அந்த பெண்ணுடன் வசித்து வந்ததாக கூறப்படும் இளம் தம்பதியே கொலைக்கு காரணம் என போலீசார் சந்தேகித்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 5-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை ஆக்ரா போலீசார் மீட்டனர். சந்தேகத்தின் பேரில் சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பது தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர், கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் இளம் தம்பதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடைய 19 வயது மகன் தாம்பரத்தில் ஏ.சி., மெக்கானிக்காக பணியாற்றி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் மோதல்?! சென்னை ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது! பகீர் பின்னணி!
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், ஒரு ஆணும் பெண்ணும் சூட்கேசை ரெயிலில் வைத்துச் சென்ற காட்சிகளை கண்டுபிடித்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்கு வெளியே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அவர்கள் பூங்கா ரெயில் நிலையத்துக்குச் சென்று, மின்சார ரெயிலில் கூடுவாஞ்சேரி சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் வசித்ததாக கூறப்படும் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அங்கு கொலை தொடர்பான முக்கிய தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகப்படும் தம்பதியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொலை நடந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில், தலைமறைவான தம்பதி எங்கு சென்றுள்ளனர் என்பதை செல்போன் தகவல்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை கண்டுபிடிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உடல் பாகங்கள் ரெயில் மூலம் வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், கொலை நடந்ததாக கூறப்படும் இடம் கூடுவாஞ்சேரி என்பதால், வழக்கை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!