×
 

திருச்சியில் அதிரடி சோதனை... ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் பறிமுதல்..!

திருச்சியில் ஹால்மார்க் இல்லாமல் நகை விற்பனை செய்து வந்த நிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி நகரின் பிரபல வணிகப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள நகைக்கடைகளில் இந்திய தர நிர்ணய அமைப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த BIS அதிகாரிகள் குழு, திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள இரு நகைக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, ஹால்மார்க் சான்று இல்லாத தங்க நகைகள் ரூ.7 கோடிக்கு மேல் மதிப்புடையவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நகைகள் அனைத்தும் தர நிர்ணய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர். 

ஹால்மார்க் என்பது தங்கத்தின் தூய்மை அளவை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ முத்திரையாகும். இந்தியாவில் தங்க நகை விற்பனையில் ஹால்மார்க் கட்டாயம் என்பது சட்டப்படி அமலில் உள்ளது. இதை மீறுபவர்களுக்கு BIS சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், கடைகளில் இருந்த பதிவுகளையும் ஆய்வு செய்து, விற்பனை நடவடிக்கைகள் குறித்த விவரங்களைச் சேகரித்தனர்.

இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்!! விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

இந்த நடவடிக்கை நுகர்வோருக்கு உயர்தரமான, தூய்மையான தங்க நகைகளை உறுதி செய்யும் BIS-ன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஹால்மார்க் இல்லாத நகைகள் வாங்குபவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, நகையின் தூய்மை குறைவாக இருந்தால் அல்லது கலப்படம் இருந்தால், மறுவிற்பனை மதிப்பு குறையும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இத்தகைய சோதனைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.BIS அதிகாரிகள் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடை உரிமையாளர்களிடம் இருந்து விளக்கம் பெறப்பட்டு, தொடர்புடைய ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. விதிமீறல் உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது BIS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்கள் ஹால்மார்க் உள்ள நகைகளை மட்டுமே வாங்குமாறு BIS தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க: E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்? ஒப்புக்கொண்ட மத்திய அரசு!! பழைய வாகனங்களுக்கு வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share