ஆசிரியர்களால் பாலியல் தொல்லை! அப்பா ஸ்டாலின் இது தான் பள்ளிக் கல்வித்துறை பொற்காலமா? - நயினார்
மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கை கழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் பிறகு 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள மீது உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அறிவாலய அரசு அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டிய காணொளி அதிர்ச்சி அளிப்பதாகவும், பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக கூறினார்.
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன் என்றும் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா எனவும் கேள்வி எழுப்பினார். அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷாவால் கன்பியூஸ் ஆன அதிமுக... ஒரே மேடையில் மாத்தி, மாத்தி பேசிய மாஜி அமைச்சர்கள் - கடைசியில் நயினார் சொன்ன ட்விஸ்ட்...!
அப்பா என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா என்றும் தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அந்தக் குழந்தைங்க கதறுறாங்க... இப்பயாச்சு உங்க காது கேக்குதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்