×
 

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..?

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2021-23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,068 கோடி மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர்கள் அணி துணைச் செயலாளர் இ.சரவணன், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார்.

மேலும் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கு இன்று (ஜூலை 25) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க: அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது ED பதிவு செய்த வழக்கு ரத்து.. ஐகோர்ட் அதிரடி..!

அப்போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆஜராகி, “ஏற்கனவே இதே கோரிக்கையுடன் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளது” என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, மின்சாரத் துறையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பான டெண்டர் செயல்முறையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை (ED) மற்றும் பிற தரப்பினரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்கையும், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவு பிறப்பித்தார். 

இந்த விவகாரத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் டெண்டர் ஒதுக்கீடு நடந்ததாகவும், இதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பணமோசடி வழக்கு உள்ள நிலையில், இந்தப் புதிய வழக்கு அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இந்த வழக்கு மேலும் தீவிரம் சேர்க்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். செந்தில் பாலாஜி தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் அவர் அளிக்கவிருக்கும் விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
 

இதையும் படிங்க: கோர்ட்டுக்கு போன தவெக கொடி நிறப் பிரச்சனை.. 2 வாரம் கெடு.. பதிலளிக்க விஜய்க்கு பறந்த நோட்டீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share