என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற படைப்பாளியான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் கலைப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவர் பிறந்த தேனி மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தனது மனமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். மாறாத கலைப் படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன்; விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, வெள்ளை திரைகளில் ஒப்பற்ற ஓவியங்களாகப் படைத்தளித்த தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற படைப்பாளி, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் புகழைப் போற்றும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள்..! இதுதான் உரிமையை காக்கும் முறையா.?கொந்தளித்த சீமான்.!!
தமிழ் மண்ணின் வாழ்வியலையும் கிராமிய மணத்தையும் உலகத் திரைக்குக் கொண்டு சேர்த்த மாபெரும் படைப்பாளியான பாரதிராஜாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மணிமண்டப அறிவிப்பினை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக சீமான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!