மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!
சிறுவன் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏவையும், ஏடிஜிபி ஜெயராமனையும் நேரில் ஆஜராக நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார். மதியம் எம்எல்ஏ ஆஜராகியிருந்த நிலையில் நீதிபதி, நீங்கள் சாதாரண நபர் அல்ல. உங்களுக்கு எதிரான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள். ஏற்கனவே, காவல்துறையும், அமைச்சர்களும் கூட்டணியாக இருக்கிறார்கள்.
எப்போது நீங்கள் மக்களுக்காக வேலை செய்வீர்கள்? குடிமகன்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். உங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது. தங்களுக்கு இருக்கும் குறைகளைத் தீர்க்க உதவுவீர்கள் என்று நம்பிதான் மக்கள் உங்களிடம் வருகிறார்கள். ஆனால், பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கட்டப்பஞ்சாயத்துகளை நடத்துகிறீர்கள். இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டால், அவர்களை திருமணம் செய்து கொள்ளட்டுமே! அதை விட வேண்டியதுதானே? திருமணத்தில் ஏதாவது சட்ட சிக்கல் இருந்தால், அதை காவல்துறை, நீதிமன்ற கவனத்திற்கு போக விடுங்கள். ஆனால் நீங்கள் மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.
இதையும் படிங்க: கேடான திமுக ஆட்சிக்கு கூட்டாட்சி தத்துவம் கேடயமா..? பொங்கி எழுந்த டாக்டர் கிருஷ்ணசாமி..!
மக்கள் கொளுத்தும் வெயிலில், சில சமயங்களில் உணவு கூட சாப்பிடாமல் தங்களுக்கு இருக்கும் குறைகளை தீர்த்து வைப்பார் என்று நம்பி வரிசையில் நின்று உங்களுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், நீங்களோ கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறீர்கள்? ஜனநாயக நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள இது சரியான நேரம். 70,000 பேர் உங்களுக்கு வாக்களித்து, நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கட்டப்பஞ்சயாத்துக்காகவா அவர்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? கிடையாது. மக்களின் வேலையை செய்வதற்காக உங்களுக்கு வாக்களித்தார்கள். வழக்கு தொடர்பாக விசாரணைக்காக காவல்துறை அதிகாரிகள் உங்களை அணுக முயன்றபோது, ஆதரவாளர்கள் வைத்து பலத்தை நிரூபிக்கிறீர்களா?
நிலைமை இப்படியோ தொடர்ந்தாரல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒவ்வொரு ஆதரவாளர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டி வரும். கடந்த 47 வருடங்களாக நீங்கள் அரசியலில் இருக்கிறீர்கள். நீங்கள் போலீசாருடன் அமர்ந்து, வழக்கு குறித்த விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஏன் உங்கள் ஆதரவாளர்கள் இதில் வருகிறார்கள்? இதுதான் அரசியலா?" என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார். பின்னர் முன்ஜாமீன் மனுவின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கை 26ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!