திருச்செந்தூரில் 50 அடி உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்!
நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு மாற்றம்; ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் இன்று திடீரென சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலுக்குள் மறைந்திருந்த பச்சை நிறப் பாசி படர்ந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிவது பக்தர்களிடையே வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் அருகே உள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் அருகே உள்ள செல்வ தீர்த்தம் பகுதி வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு இந்த மாற்றம் தெரிகிறது. கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் கடல் நீர் பின்வாங்கியுள்ளதால், கடற்கரை மணல் பரப்பு அகலமாகக் காட்சியளிக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி போன்ற விசேஷ நாட்களில் கடல் நீர் உள்வாங்குவதும், பின்னர் சீற்றத்துடன் வெளியே வருவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான். நேற்று பௌர்ணமி தினம் என்பதால், அதன் தாக்கத்தினால் இன்று கடல் நீர் உள்வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தான் 2G ஊழலுக்கு காரணம் - குண்டைத் தூக்கிப்போட்ட ஆ. ராசா... பகீர் கிளப்பும் ஆடியோ லீக்...!
கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பச்சை நிறப் பாசி படிந்த பாறைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் மீது ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். இருப்பினும், இந்தப் பாறைகள் வழுக்கும் தன்மை கொண்டவை என்பதால், பாறைகள் மீது ஏறுவது ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்தப் பாறைகளுக்கு இடையே உள்ள பகுதியில் புனித நீராடியும் வருகின்றனர்.
கடல் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி சீற்றத்துடன் வரக்கூடும் என்பதால், பக்தர்கள் கடலுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டாம் எனத் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!