6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
சட்டவிரோத தனியார் கல் குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேவகோட்டை சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள மெகா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரியில் மே 20 அன்று நிகழ்ந்த விபத்தில், 400 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கணேஷ், அர்ஜித், ஆண்டிச்சாமி, ஆறுமுகம், முருகானந்தம், மைக்கேல் ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக, கனிமவள பிரிவு வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் மல்லாக்கோட்டை வி.ஏ.ஒ பாலமுருகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சிங்கம்புணரி தாசில்தார் பரிமளம் நில எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். குவாரியின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...!
இந்த நிலையில், விதிகளை மீறி சட்டவிரோதமாக கரடுமுரடான கற்களை எடுத்ததற்காக மல்லாக்கோட்டை தனியார் கல் குவாரிக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாமல் குவாரி நடத்தப்பட்ட நிலையில், உரிமம் காலாவதியான பிறகு வேறொரு இடத்திற்கு வாங்கிய உரிமம் வைத்து சட்ட விரோதமாக குவாரியை நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!