கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எகிறும் எண்ணிக்கை.. மீண்டும் லாக்டவுன்..?
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே ஆட்டம் காண வாய்த்த கொரோனா தொற்று பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோவிட்-19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் நேற்று (ஜூன் 05) ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 221 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். விழுப்புரம் பேரப்பேரி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியை அடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு, சிறுநீரகம், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் நாம் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!