எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!
வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க, 14.2 கிலோ கொண்ட வீட்டு சமையல் சிலிண்டரின் எடையை, 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
மேற்காசியாவில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நான்காவது வாரமாக தொடரும் போர், இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) இறக்குமதி கடுமையாக குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றன. தற்போது 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் காஸ் சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் அளவை 10 கிலோவாக குறைத்து விநியோகிக்கலாம் என்பது அந்த திட்டம்.
இதையும் படிங்க: US போர் விமானங்கள் இறங்க தடை! இலங்கை செய்த தரமான சம்பவம்!! அமெரிக்காவுக்கு விழுந்த அடி!
ஒரு சராசரி குடும்பத்துக்கு 14.2 கிலோ சிலிண்டர் சுமார் 35 முதல் 40 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் 10 கிலோ சிலிண்டர் சுமார் 25 முதல் 30 நாட்கள் மட்டுமே நீடிக்கும். இந்த மாற்றத்தால் குறைந்த அளவு எரிவாயுவை அதிக குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன.
எடையை குறைக்கும் அதே நேரத்தில், சிலிண்டரின் விலையையும் அதற்கேற்றவாறு குறைத்து, புதிய ஸ்டிக்கர் ஒட்டி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த பாதை முடக்கப்பட்டதால், நாட்டின் எல்பிஜி நுகர்வு 17 சதவீதம் வரை சரிந்துள்ளது. தற்போது தேசிய கொடி பறக்கும் ஆறு இந்திய எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு இந்த நெருக்கடியை சமாளிக்க, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை 27லிருந்து 41ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், எடை குறைப்பு திட்டம் நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சூழலில் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தலாம்.
எண்ணெய் அமைச்சகம் இந்த திட்டம் “உறுதிப்படுத்தப்படாத வதந்தி” என மறுத்துள்ள போதிலும், தட்டுப்பாடு நீடித்தால் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பீதியடையாமல், தேவைக்கு அதிகமாக சிலிண்டர் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் வரை இந்த நெருக்கடி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. வீட்டு சமையல் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: ஈரானின் ஏவுகணை தயாரிக்கும் திறன் காலி! போர் விரைவில் முடியும்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்!