×
 

கச்சா எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவில் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை..?? வெளியான முக்கிய அப்டேட்..!!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக அளவில் எண்ணெய் சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதல் தீவிரமடைந்ததால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுகிறது. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத் போன்றவற்றிலிருந்து எண்ணெய் கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகவே வெளியேற வேண்டும். ஈரான் இதை மூடியுள்ளதாக அறிவித்து, கடந்து செல்லும் கப்பல்களை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல எண்ணெய் டேங்கர்கள் சிக்கி உள்ளன.

சுமார் 150க்கும் மேற்பட்ட கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அச்சம் காரணமாக பெரும்பாலான ஷிப்பிங் நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடு. நாட்டின் தேவையில் 85-90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சுமார் 50 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!

இந்த தடை நீடித்தால், எண்ணெய் வரத்து குறையும் அபாயம் உள்ளது. மேலும், ரஷ்யாவிலிருந்து இந்தியா குறைத்து வரும் எண்ணெய் இறக்குமதியும் இதற்கு மேலும் சேர்க்கை ஆகியுள்ளது. இதனால், எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை இணைந்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 91-92 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. 

எண்ணெய் விலை டாலரில் உயர்ந்திருப்பதால், அதை வாங்க இந்தியா இன்னும் அதிக ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது இறக்குமதி செலவை பெரிதும் அதிகரிக்கும். இந்த சூழலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சகங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளன. இதில் ஏற்றுமதி, வர்த்தகம், எண்ணெய் போக்குவரத்து ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. தற்போது இந்தியாவிடம் 25-45 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி தவிர்த்து ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், நைஜீரியா போன்ற பிற நாடுகளிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை. சாமானிய மக்களுக்கு தற்போதைய விலையிலேயே எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா டுடே போன்ற ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டால், சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கும். இதனால் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும். இது கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும். 

எனவே, அரசு இந்த நெருக்கடியை கவனமாக கையாள முயல்கிறது. தற்போதைய சூழலில், மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்பது அரசின் நிலைப்பாடு. இருப்பினும், போர் நீடித்தால் நீண்டகால தாக்கம் ஏற்படலாம். எனவே, அரசு மாற்று வழிகளை ஆராய்ந்து, எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்து வருகிறது.

இதையும் படிங்க: எரிபொருள் தட்டுப்பாடு வராது! 40-45 நாட்களுக்கான கச்சா எண்ணெய் இருப்பு குறித்து இந்தியா தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share