"டாஸ்மாக் முறைகேடு வழக்கு:" முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு!
டாஸ்மாக் பார்களில் ₹17.27 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பார் டெண்டர் ஒதுக்கியதில் அதிகாரிகளுடன் இணைந்து சுமார் ரூ. 17.27 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது முன்னாள் உதவியாளர் பாஸ்கர் மற்றும் நெருங்கிய சகாவான ரதீஷ் ராஜ் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) எஃப்.ஐ.ஆர். (FIR) வழக்குப் பதிவு செய்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 6 மேற்கு மண்டல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கான பார்களை ஏலம் விட்டதிலும், பார் டெண்டர்களை ஒதுக்கியதிலும் விதிகள் முற்றிலும் மீறப்பட்டுப் பெரும் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), பார் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுடன் ரகசியக் கூட்டு சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயை மறைத்து முறைகேடாகச் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய ரூ. 17.27 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தமர் வேஷம் எடுபடாது 'Mr மெகா க்ளீன்'.. செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!!
இவ்வழக்கில் முதன்மைச் சந்தேக நபராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அவரது முன்னாள் உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமான ரதீஷ் ராஜ் மற்றும் சில முக்கியத் துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு சட்டப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தற்போது புதிதாகத் டாஸ்மாக் முறைகேட்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் ஜாமீன் மனுவில் திடீர் மாற்றம்! விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைப்பு!