×
 

இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

கல்லூரி சுற்றறிக்கை மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க கல்லூரி கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் விவரங்களைச் சேகரிக்க வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ஆகியவை ஜனநாயகத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் என்றும், இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்களா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான பி. சண்முகம் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ/வீடியோ உரையில், கல்லூரி கல்வி ஆணையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமையின்படி மாணவர்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாதது என்றும், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் மாணவர் அமைப்புகளைக் குறிப்பிடாமல், இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கண்காணித்து ஒடுக்க முயல்வது அப்பட்டமான உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் சாடினார். 

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!

சட்டப்பேரவையில் துறை அமைச்சர் தேவையற்ற வார்த்தைகள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டன' எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும், தலைமைச் செயலாளர் நடத்திய சட்ட ஒழுங்கு கூட்டத்தின் முடிவிலேயே இது வெளிவந்திருப்பதால், இச்சுற்றறிக்கைக்குக் காரணமான அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஒருவர் சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் முகவரி விவரங்களை 24 மணி நேரத்திற்குள் சேகரித்துத் தருமாறு பிறப்பித்த சர்ச்சை சுற்றறிக்கையைக் கடுமையாகச் சாடிய பி. சண்முகம், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என்ன தடை செய்யப்பட்ட இயக்கங்களா அல்லது சட்டவிரோத கட்சிகளா? எனக் கொந்தளித்தார். 

இத்தகைய சுற்றறிக்கை உயர் அதிகாரிகளான கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிந்தே அனுப்பப்பட்டிருந்தும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் தெரிவித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை வழக்கமான பயிற்சி நிறைவு என்ற பெயரில் இடமாற்றம் செய்தது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், அவர் மீது துறைரீதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்களா அல்லது தன்னிச்சையாகச் செயல்படுகிறார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதிகாரிகள் செய்யும் தவறுகளும் வீணான நடவடிக்கைகளும் அரசுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரங்களில் தலையிட்டு அதிகாரிகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தைச் சரியான திசைவழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share