காலையில் ஏவுகணை தாக்குதல்!! மாலையில் போர் நிறுத்தம்! இஸ்ரேல்- ஈரான் நடவடிக்கையால் மேற்காசியாவில் குழப்பம்!
இஸ்ரேல் - ஈரான் நேற்று காலையில் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால், மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நேற்று ஒருவருக்கொருவர் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மேற்காசியா மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக நேற்று மாலை அறிவித்துள்ளன.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்த போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது தாக்குதல்கள் தொடர்ந்து வந்தன.
நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஹெஸ்பொல்லா நிலைகளை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தடுத்து அழித்தன. பின்னர் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து பாதுகாப்பு நிலைகள் மற்றும் பெட்ரோலிய ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
இதையும் படிங்க: ஓமனில் ஈரான் ட்ரோன் தாக்குதல்!! நீடிக்கும் பரபரப்பு!! கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம்!
இந்த நேரடி தாக்குதல்களால் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவானது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமைதிக்கான இறுதி பேச்சு நடந்து வருகிறது. தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள்” என வலியுறுத்தினார். லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓமன் கடற்பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. கர்நாடகாவின் கார்வாரில் இருந்து ஓமன் நோக்கி சென்ற 24 இந்திய மாலுமிகளுடன் கூடிய கப்பலை ஹவுதி பயங்கரவாதிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்திய கடற்படை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கையால் அனைத்து மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளனர். செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களைத் தாக்குவோம் என எச்சரித்துள்ளனர்.
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்களுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. “மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு” அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்? முறியடித்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!