ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிப்பு! பயங்கரவாதிகளுக்கு ‘பாதை’ காட்டிய 3 பேர் கைது!
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், முகமது ஆசம் மற்றும் முகமது முஷ்டாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு தேவையான தளவாட உதவிகளை வழங்குவது, அவர்கள் பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட மறைமுக உதவிகளில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழிகாட்டிகளாக செயல்பட்டு பயங்கரவாதக் குழுக்களை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்துச் செல்லவும் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் திடீர் துப்பாக்கிச்சண்டை! மலைப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர்! பயங்கரவாதிகள் சதி?!
இதையடுத்து, இந்த 3 பேருக்கும் காஷ்மீரில் நடைபெற்ற அல்லது திட்டமிடப்பட்ட சில முக்கிய தாக்குதல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு இவர்கள் உதவி செய்தார்களா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஇடி வகை வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் தங்களிடம் ஒப்படைத்ததாகவும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் தேவைப்படும் நேரத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதையடுத்து, திட்டமிடப்பட்டிருக்கக்கூடிய தாக்குதல் தொடர்பான தகவல்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவிலேயே அவர்களின் தொடர்புகள் மற்றும் திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக். ட்ரோன்கள் ஊடுருவல்! வானிலேயே இந்திய படைகள் கொடுத்த பதிலடி! ஹை அலர்ட்!