ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?
நாளை தணிக்கை பணிகள் வெற்றிகரமாக முடிந்தால், ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு) அல்லது மே மாதம் தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடத் தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை (மார்ச் 17) மும்பையில் உள்ள தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு இப்படத்தைப் பார்வையிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாக வேண்டியது. ஆனால், ராணுவம் தொடர்பான காட்சிகள் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சில காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது.
தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும், டிவிஷன் பெஞ்ச் அதற்குத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட மறுத்ததால், சட்டப் போராட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. சட்டப் போராட்டத்தால் காலதாமதம் ஆவதைத் தவிர்க்க, தயாரிப்பு நிறுவனம் கடந்த மாதம் நீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெற்றது. தற்போது தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழுவிற்கு (RC) விண்ணப்பிக்கப்பட்டு, நாளை (மார்ச் 17) அதற்கான திரையிடல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!
நாளை நடைபெறும் மறு தணிக்கையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு சான்றிதழ் கிடைத்தால், படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அல்லது தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) சமயத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தணிக்கைத் திருத்தங்களுக்கு அதிக காலம் எடுக்கும் பட்சத்தில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே (மே 4-க்குப் பின்) படம் வெளியாகும் சூழல் உள்ளது.
விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பான கடைசித் திரைப்படம் என்பதால், 'ஜனநாயகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. நாளை வெளியாகும் தணிக்கை வாரியத்தின் முடிவுதான் இப்படத்தின் ரிலீஸ் தேதியைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: விஜய் கட்சி இன்னும் ரசிகர் மன்றம் தான்... தஞ்சையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விமர்சனம்!