×
 

புதிய உயரத்தை தொடும் இந்தியா-ஜப்பான் உறவு..!! டெல்லி வருகிறார் பிரதமர் சனாயே தகாயிச்சி..!!

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு சனாயே தகாயிச்சி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பான் பிரதமர் சனாயே தகாயிச்சி அடுத்த வாரம் இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜூலை 1 முதல் 3 வரை புது தில்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் சனாயே தகாயிச்சி மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய கூட்டுறவை ஆழப்படுத்தும் முக்கிய தருணமாகப் பார்க்கப்படுகிறது. உச்சி மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

இந்தியா-ஜப்பான் உறவுகள் சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளன. QUAD (குவாட்) கூட்டமைப்பின் ஊடாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, திறந்த, வளமான கடல் பகுதியை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையில் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி ஆகியவை முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

மேலும், உயர் தொழில்நுட்பம், அரைக்கடத்திகள், பசுமை எரிசக்தி, ரயில்வே உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஜப்பானின் முதலீட்டை அதிகரிக்கும் வழிகள் ஆராயப்படும். இரு தலைவர்களும் இருதரப்புக் கூட்டுறவின் அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்த செயல்பாடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பொதுவான சவால்களும் விவாதிக்கப்படலாம். இந்தப் பயணம், ‘ஸ்பெஷல் ஸ்ட்ராட்டஜிக் அண்ட் க்ளோபல் பார்ட்னர்ஷிப்’ என்ற உயரிய அந்தஸ்தில் இயங்கும் இந்தியா-ஜப்பான் உறவுகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று இருதரப்பு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 


 

இதையும் படிங்க: "யூடியூபில் உலகக்கோப்பை நேரலை!": மகளிர் கிரிக்கெட்டை உலகளவில் கொண்டு செல்ல ஐசிசி அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share