"மக்கள் விரோத அணுகுமுறை"..! சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெறுக..! ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.!!
சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் சமீபத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. வாகன வகைகளுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி பயணம் செய்யும் சாதாரண மக்கள், வணிகர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினரும் கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு இந்த உயர்வு மேலும் பாரமாக மாறியுள்ளது.இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்குப் பதிலாக கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது மக்கள் விரோத அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார்.
சாலைகள் மேம்படுத்தப்பட்டதாகவும், பயணம் எளிதாக்கப்பட்டதாகவும் கூறி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் சாலைகளின் தரம் இன்னும் மோசமாகவே உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜவாஹிருல்லா மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, காலாவதியான சுங்கச்சாவடிகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல் அறுபது கிலோமீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட வேண்டும்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!
இந்தக் கோரிக்கைகள் நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும், அரசியல் கட்சிகள் வலியுறுத்தியும் வந்திருந்தாலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கட்டண உயர்வு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்களின் நம்பிக்கையைக் குலைக்கிறது.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!