இரண்டே கேள்வி... நெற்றில் பொட்டில் அடித்தது போல் விஜயை தெறிக்கவிட்ட கனிமொழி... முதல் கேள்வி தான் ஹைலைட்டே...!
திரைப்படத் தயாரிப்பாளரும் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபருமான ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட இந்தப் பொறுப்புக்கு, திரைப்படத் தயாரிப்பாளரும் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபருமான ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல், நிர்வாக அனுபவம் கொண்ட பலர் இருக்கும்போது கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரை ஏன் தேர்வு செய்தீர்கள்?,
முதல்வரின் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பது மட்டுமே இந்தப் பதவிக்கு தகுதியா?, தமிழக அரசின் நலன்களை மத்திய அரசிடம் வலியுறுத்தும் முக்கிய பொறுப்புக்கு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத ஒருவரை நியமித்தது சரியா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கடநாராயணாவை நியமிக்கவிருப்பதாக ஜோசப் விஜய் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
தமிழகம், கர்நாடகம் இடையே, மேகதாது அணை பிரச்னை உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்தவரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருப்பது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்திருந்தார். அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவி, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவி. இப்பதவியை ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு வழங்கியது, கண்டனத்திற்குரியது எனக்கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கனிமொழி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன. 1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?. 2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் 9,000 பேராசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!