தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!
தமிழக வெற்றி கழகம் நீதிமன்றத்தை நாடலாம் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது தமிழக அரசியலில் ஏகபோகமாக இருந்த திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிய ஒரு பெரிய மாற்றம். ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் தவெக 10 இடங்கள் பின்தங்கியிருப்பது, ஆட்சி அமைப்பு குறித்த சிக்கல்களை உருவாக்கியது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விஜய் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவர் 15 நாட்கள் அவகாசம் கோரி பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க தயார் எனக் கூறினார்.
தவெகவுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 இடங்கள் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவு கிடைத்ததாகவும், இதனால் அவர்களின் பலம் 113 வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இன்னும் முழு பெரும்பான்மை உறுதியாகவில்லை. ஆளுநர் அர்லேகர், விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்காமல், பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதங்கள் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!
இந்த நிலையில், தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழகம் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுரை வழங்கினார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் தமிழக வெற்றி கழகம் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார். சட்ட நிவாரணம் கோரி தமிழக வெற்றிக்கழகம் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!