அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!
இன்று காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் திங்கட்கிழமையன்று மிக கனமழை பெய்யலாம் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு ஊத்தும் கனமழை..!! ஹை..!! இந்த ஊர்ல ஸ்கூலுக்கு லீவு..!! குஷியில் மாணவர்கள்..!!
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17/11/25) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை திங்கட்கிழமை(17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா..!! நவ.1ம் தேதி என்ன குட் நியூஸ் தெரியுமா..?? வெளியான முக்கிய அறிவிப்பு..!!