"காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மின்சாரத் துறையின் உள்கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மின்வெட்டு என்பது ஏதோ தற்காலிகமான ஒரு பிரச்சினை கிடையாது; நமது மின்சாரத் துறையின் அடிப்படை உள்கட்டமைப்புகளிலேயே பல குறைபாடுகளும் பிரச்சினைகளும் நீடித்து வருகின்றன. இதற்குத் தீர்வாகச் சூரிய ஒளி மின்சாரத்தின் (Solar Energy) பயன்பாட்டை நாம் பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் (DISHA) தலைவரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தத் தணிக்கைக் கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறித்துச் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் நிறைவடைந்த பின் வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி ஜோதிமணி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்பு குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ந்து அரங்கேறி வரும் கொடூரக் குற்றங்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் மிக விரைந்து வழங்கப்பட வேண்டும். பெண்களை வெறும் போதைப்பொருளாகப் பார்க்கும் அவல நிலை மாற வேண்டும். அதற்கு ஆண்களிடம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நமது கல்வி முறையில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!
மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பராமரிப்பு மற்றும் காவலர்களின் பணிச்சுமை குறித்துப் பேசிய அவர், "தற்பொழுது நமது காவல் துறையில் காவலர்கள் பற்றாக்குறை பரவலாக இருந்து வருகிறது. இதனால் காவலர்களுக்குப் பணி ரீதியாகப் பல்வேறு நெரிசல்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. காவல் துறையின் செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டுமானால், கூடுதலான காவலர்களைப் பணிக்கு நியமிக்க வேண்டும்; அதற்கேற்ற புதிய உள்கட்டமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, மாநிலத்தின் மின்சாரத் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோதிமணி, மின்வெட்டுப் பிரச்சினைக்கு நீண்ட காலத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்குப் பாரம்பரிய மின்சார உற்பத்தியைச் சார்ந்து இருப்பதை விடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளி மின்சார உள்கட்டமைப்பை நோக்கித் தமிழ்நாடு வேகமாக நகர வேண்டும் என்றும் தனது பேட்டியில் தெளிவாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாவட்டங்களிலும் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில், ஆளுங்கட்சியின் கூட்டணி எம்பியான ஜோதிமணி உள்கட்டமைப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!