கரூர் பெருந்துயரம்... ஹைகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு... கறார் காட்டிய உச்ச நீதிமன்றம்...!
கரூர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறுகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ ஜி அஸ்ரா காருக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே, த.வெ.கவின் தலைமை நிர்வாகிகள் என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணை அரசியல் ரீதியாகத் தங்களை இலக்காக்கும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறி, முதலில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், விசாரணை போலீஸ் துறையால் நடத்தப்படுவதால், அது நடுநிலையற்றதாக இருக்கும் என வாதிடப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது கரூர் பெருந்துயர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடைமுறையில் தவறு உள்ளதாக உச்சநீதிமன்றம் கருதி உள்ளது. உயர் நீதிமன்ற கிளை விசாரிக்கும் போது உயர்நீதிமன்ற அமர்வு வழக்கை எடுத்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் நல்லபடியா நடக்கணும் முருகா... விஜய்- காக மொட்டை போட்ட பெண்...!
உயர் நீதிமன்ற கிளை விசாரிக்கும் போது வழக்கை எடுத்தது குறித்து சென்னை ஹைகோர்ட் பதிவாளர் அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஹைகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பின் அது குறித்து விவாதிக்கலாம் எனக் கூறி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: களத்துக்கு வந்த விஜயின் பிரச்சார வாகனம்... உற்சாகத்தில் வாரியர்ஸ்..!