×
 

முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்று அரசு பணி ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் பயணம் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம், கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் கரூர் பயணம் இதுவாகும். கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற விஜய், அதன்பின் ஜூன் 1-ஆம் தேதி திருச்சிக்கு சென்று, தாம் வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் மேற்கொள்ளும் முக்கிய மாவட்டப் பயணமாக கரூர் பயணம் அமைந்துள்ளது.

இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்குப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காலை 10.40 மணியளவில் கார் மூலம் கரூருக்கு புறப்படும் முதலமைச்சர், நண்பகல் 12.40 முதல் 12.45 மணி வரை கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும், கரூர் சாந்தோணி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்தபடி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார்.

பிற்பகல் 2.50 மணியளவில் அங்கிருந்து புறப்படும் முதலமைச்சர், மாலை 3 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

அந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு, அரசின் பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த நிகழ்வே இன்றைய பயணத்தின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அதன்பின் மாலை 4.10 மணியளவில் கரூரிலிருந்து திருச்சிக்குப் புறப்படும் முதலமைச்சர், மாலை 6 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இந்தப் பயணத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அட்லஸ் கலையரங்கில் இருந்து அரசு சுற்றுலா மாளிகை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெறவுள்ள சாலைப் பேரணிக்காக சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் சந்திப்பு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

அந்த மனுவில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சாட்சிகளாக உள்ள குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையின் போக்கை பாதிக்கக்கூடும் என்றும், அதனால் அரசு பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மற்றொரு மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஒருபுறம் முதலமைச்சர் விஜய் கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மறுபுறம் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது அரசியல் மற்றும் சட்டரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share