விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!
கேரளாவின் ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்து விரைவில் தமிழக முதல்வர் விஜய் கேரளா செல்கிறார்.
அண்டை மாநிலமான கேரளாவில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அம்மாநில அரசால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் டூஃபான்’ (Operation Toofan) திட்டத்திற்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தங்களது முழுமையான ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போதை ஒழிப்புப் போரில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்படும் வகையில், கூட்டுப் பிரசாரங்களில் பங்கேற்கத் தமிழக முதல்வர் விஜய் விரைவில் கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை, கேரள மாநில உள்துறை அமைச்சர் திரு. ரமேஷ் சென்னிதலா நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேரள அமைச்சர் சென்னிதலா, தென் மாநிலங்களில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை வேரறுக்கத் தற்போதைய தமிழ்நாடு அரசு தங்களோடு முழுமையாகத் துணை நிற்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். கேரளாவில் வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தமிழக எல்லைப் பகுதிகள் வழியாகக் கேரளாவுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், இரு மாநிலக் காவல்துறையினரிடையே உளவுத் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்குத் தனி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, வாளையாறு, செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய எல்லைச் சோதனைச் சாவடிகள், இரயில் நிலையங்கள், கடலோரப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் கண்காணிப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கத் தமிழகப் டிஜிபி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத தென்னிந்தியாவை உருவாக்கும் நோக்கில், விரைவில் கொச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்கக் கேரளா வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முதலமைச்சர் விஜய் அன்போடு ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த அமைச்சர் சென்னிதலா, தமிழகத்தில் தவெக அரசின் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தையும், முதலமைச்சரின் மக்கள் நலப்பணிகளையும் மனதாரப் பாராட்டுவதாகத் தனது பேட்டியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!
இதையும் படிங்க: மரண பிடியில் வயநாடு! கனமழை நிலச்சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!