வீட்டு கேஸ் சிலிண்டர் விலையேற்றம்! விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி! நடுத்தர மக்கள் அவதி!
வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று ( ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை உயர்வு ஜூன் 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சமையல் எரிவாயுவை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இறக்குமதி செலவுகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் எரிவாயு விலைகள் மாற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 ஆகவே நீடித்த நிலையில், தற்போது ரூ.29 உயர்வால் அதன் விலை ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.942, மும்பையில் ரூ.941.50 மற்றும் கொல்கத்தாவில் ரூ.968 என புதிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாத்தம் குடலை புரட்டுது!! தலைமை செயலகத்தை சூழ்ந்த புகைமூட்டம்! சுவாசிக்க மக்கள் சிரமம்!
கடந்த சில மாதங்களாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் செலவினங்களும் உயர்ந்துள்ளன. குறிப்பாக மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக எரிபொருள் சந்தையில் அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டிருப்பது குடும்ப செலவுகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலைகளும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமான குடும்பங்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் சூழலில், சமையல் எரிவாயு விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!