சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம்! ஆதார் சரிபார்ப்பு கட்டாயமல்ல! மத்திய அரசு விளக்கம்!
சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு என்பது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் காரணமாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
மார்ச் 15-ஆம் தேதி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சமையல் காஸ் சிலிண்டர் பெறுவதற்கு அனைத்து நுகர்வோரும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு (e-KYC) செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால், இப்போது அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இந்த சரிபார்ப்பு அனைத்து நுகர்வோருக்கும் கட்டாயமல்ல. ஏற்கனவே ஒருமுறை பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு செய்தவர்கள் மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை சரிபார்க்காதவர்கள் மட்டுமே இதை மேற்கொள்ள வேண்டும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அன்புக்கு அடிபணிபவர் ரஜினி! அவரை மிரட்டி பணியவைக்க முடியாது! அமைச்சர் ரகுபதி விளக்கம்!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டும் நிதியாண்டுக்கு ஒருமுறை இந்த சரிபார்ப்பு கட்டாயம். குறிப்பாக, 7 சிலிண்டர்களை பெற்ற பிறகு 8-ஆவது அல்லது 9-ஆவது சிலிண்டரை பெறும்போது இது அவசியமாகிறது. மானியம் பெறுவதற்கு இது தேவைப்படுகிறது.
மேலும், இந்த e-KYC-ஐ வீட்டிலிருந்தே மொபைல் ஆப் மூலம் (எண்ணெய் நிறுவனங்களின் ஆப் மற்றும் ஆதார் FaceRD ஆப் பயன்படுத்தி) முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதனால் சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம், முறைகேடாக சிலிண்டர் பயன்படுத்துபவர்களை கண்டறிவது மற்றும் மானியம் சரியானவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே.
மத்திய அரசின் இந்த தெளிவுபடுத்தல் மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே சரிபார்த்தவர்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. சரிபார்க்காதவர்கள் விரைவில் செய்து கொள்ளலாம். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், எச்பிசி போன்ற நிறுவனங்கள் இலவசமாக உதவி செய்ய தயாராக உள்ளன. எல்பிஜி தட்டுப்பாடு நெருக்கடியில் இந்த விளக்கம் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
இதையும் படிங்க: அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!