×
 

புதுச்சேரியை முதன்மை மாநிலமாக்குவோம்! தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத் தொடக்கம்!

நாங்கள் வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு செவன்த் பே கமிஷன் வழங்குவோம்- ரங்கசாமி வாக்குறுதி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கமாக உள்ள அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான என். ரங்கசாமி அவர்கள் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை முறைப்படி தொடங்கினார். தான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் பிரசார வாகனத்தில் நின்றபடி அவர் பொதுமக்களிடையே உரையாற்றினார், ஏற்கனவே புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து முதலமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் உருக்கமாகப் பேசினார். கதிர்காமம், இந்திராகாந்தி மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய மூன்று தொகுதிகளையும் ஒரே தொகுதியாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ₹1,000 உதவித்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்கியுள்ளோம் என்றும், அதில் இரண்டு மாதத் தொகையான ₹5,000 ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், முதியோர் உதவித்தொகை உயர்வு மற்றும் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கும் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

இதையும் படிங்க: தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்!

அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; குறிப்பாகக் காவல்துறையில் 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு (7th Pay Commission) பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்ற மெகா வாக்குறுதியையும் அவர் அளித்தார்.

லிங்கா ரெட்டிபாளையம் அரசு சர்க்கரை ஆலையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தேர்தல் பணி முடிந்த பிறகு எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

சிறிய மாநிலமான புதுச்சேரி, நலத்திட்டங்களை வழங்குவதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தொகுதிகளின் வளர்ச்சிக்கும் பாகுபாடின்றி நிதியுதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், புதுச்சேரியின் முழுமையான வளர்ச்சிக்காக மீண்டும் தமக்கு வாய்ப்பளித்து 'ஜக்கு' சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
 

இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்! முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share