×
 

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து?! 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் கெடு!

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய உரிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என உறுதி செய்ய நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரிய பொதுநல வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, தேசிய கீதத்துடன் நிறைவு பெறும் மரபு இருந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், மே 10-ம் தேதி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் முதலில் ‘வந்தே மாதரம்’, பின்னர் தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 28 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு நிகழ்ச்சிகளை ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்க வலியுறுத்தியுள்ள நிலையில், இது தமிழர்களின் உணர்வு மற்றும் கலாசார அடையாளத்தை பாதிப்பதாக மனுதாரர் சுட்டிக்காட்டினார். தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் சடங்கு அல்ல, தமிழர்களின் உயிர் நாடியாகும் எனவும், மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த வழக்கின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share