×
 

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை விரிவான பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிக்கிம் மாநில லாட்டரி முறைகேடு வழக்கில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ₹457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில், அமலாக்கத் துறை விரிவான பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக நடைபெற்றது.

கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டு காலகட்டங்களில், விதிகளை மீறிச் சிக்கிம் மாநில அரசு லாட்டரி சீட்டுகளை விற்றதன் மூலமாக, அந்த மாநில அரசுக்குச் சுமார் ₹910 கோடி அளவுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சிபிஐ வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக, மார்ட்டின் மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் ₹457 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. இந்தச் சொத்து முடக்க உத்தரவை புதுடெல்லியில் உள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இந்தச் சூழ்நிலையில், அமலாக்கத் துறையின் சொத்து முடக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும், முடக்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: "அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ கிடையாது": திமுக புகாருக்கு அமலாக்கத்துறை விளக்கம்!

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவியும் சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டினின் மகளும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவியுமான டெய்சி மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்தச் சொத்து முடக்க உத்தரவை ரத்து செய்து, சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த மனுக்களை முழுமையாகப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இந்தச் சொத்து முடக்க விவகாரம் மற்றும் இடைக்காலத் தடை கோரும் மனுக்கள் குறித்து அமலாக்கத் துறை விரிவான பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் முக்கிய விசாரணையை அடுத்த 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்துத் தலைமை நீதிபதி அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share