நீட் எதிர்ப்பு பிரசாரத்திற்கு தடை ஏன்? தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
நீட் தேர்வு மற்றும் EWS இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொள்ள இருந்த பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு மற்றும் EWS பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டித்துத் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைக் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு மற்றும் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத EWS இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக மாநிலம் தழுவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தன. இதற்காகக் காவல்துறையிடம் முன்அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்த நிலையில், பயணக் தொடக்கத்திற்கு மிகச் சில மணி நேரங்களுக்கு முன்பாகக் காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட அனுமதி திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
காவல்துறையின் இந்த அராஜகமான உத்தரவை எதிர்த்தும், இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்குத் தடையின்றி அனுமதி வழங்கக் கோரியும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் கருத்துப் பிரச்சாரம் மேற்கொள்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றும், அதற்குத் தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!
இம்மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்டறிந்த நீதியரசர், திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தும், கடைசி நேரத்தில் அனுமதி திரும்பப் பெறப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தமிழ்நாடு காவல்துறை உடனடியாகப் பதிலளிக்க உத்தரவிட்டு, நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!