×
 

தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு விரைவில் கொள்கை முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துத் விரைந்து கொள்கை முடிவு (Policy Decision) எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகள் பொதுமக்கள் மற்றும் எளிய மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. மத்திய அரசு பைக் டாக்ஸி சேவைக்கு ஒப்புதல் அளித்து, மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இச்சேவையை முறைப்படுத்தத் தனியாக எவ்வித ஒழுங்குமுறை விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எளிய ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பைக் டாக்ஸிகளை முறைப்படுத்தத் தனி அமைப்பை உருவாக்கவும், உரிமம் வழங்க விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பைக் டாக்ஸிகளுக்கு மாநில அளவில் அனுமதி வழங்குவது குறித்து ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும். அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி கிடையாது. விதியை மீறி சட்டவிரோதமாகப் பைக் டாக்ஸிகளை இயக்கி வந்தால் கண்டிப்பான முறையில் அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் எனத் திட்டவட்டமாக வாதிட்டார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

அரசு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் குறுக்கிட்டு, அனுமதி இல்லாத பைக் டாக்ஸிகளில் பொதுமக்கள் பயணிப்பதைத் தவிர்க்க இது குறித்து ஏன் முன்கூட்டியே விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது? ஒருவேளை பைக் டாக்ஸியில் பயணிக்கும் போது ஏதேனும் விபத்து நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மாநில அரசு பைக் டாக்ஸிகளுக்கு முற்றுப்புள்ளியாகத் தடை விதிக்க முடியாது; மாறாக உரிய விதிகளின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே முடியும் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தாமதிக்காமல் விரைவாகக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share