மதுரைக்கு கிடைத்த மெகா பரிசு! சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியது மத்திய அரசு!
பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய மத்திய அமைச்சரவை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தென் தமிழக மக்களின் நீண்டகாலக் கனவான மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக (International Airport) தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 11) தமிழகத்திற்கு வருகை தர உள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை ‘சுங்க விமான நிலையமாக’ (Customs Airport) மட்டுமே இருந்து வந்த மதுரை விமான நிலையம், இனி முழுமையான சர்வதேச விமான நிலையமாகச் செயல்படும். இதன் மூலம் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக மதுரையிலிருந்து தங்களது சேவையைத் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அந்தஸ்துக்கு ஏற்ப, விமான நிலையத்தின் ஓடுபாதையை (Runway) நீட்டித்தல், நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் (Terminal) அமைத்தல் மற்றும் கூடுதல் விமான நிறுத்துமிடங்கள் போன்ற பணிகளுக்கு மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!
இந்தத் தரம் உயர்த்தல் மூலம் தென் தமிழகத்தின் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், குறிப்பாக மல்லிகைப் பூ ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஆன்மீகச் சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, இந்தச் சர்வதேச அந்தஸ்து குறித்த விரிவான திட்டங்களை முறைப்படி அறிவித்து, அதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிகிறது.
பல ஆண்டுகளாக மதுரையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விடுத்து வந்த கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இது மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!