கவர்னரை அவமதித்ததை ஏத்துக்க முடியாது!! மதுரை ஐகோர்ட் கிளை திட்டவட்டம்!!
''பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல,'' என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவியின் செயல் ஏற்புடையதல்ல என்று மதுரை கிளை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
அந்த மாணவியின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யுமாறு வழக்குத் தாரர் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர், பல்கலை சட்டத்தில் இதற்கான நடவடிக்கை வழிவகை உள்ளதா என்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்ற திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டளிப்பு விழாவில், முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப், கவர்னர் ரவியிடம் பட்டச்சான்றிதழை பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றிதழை காட்டி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்: முதல்வருக்கு அமித் ஷா பகிரங்க எச்சரிக்கை!
அனைவரின் முன்னிலையில் இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜீன் ஜோசப், “கவர்னர் ரவி தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை” என்று தெரிவித்தார். விசாரணையில் அவர் நாகர்கோவில் நகர திமுக துணைச் செயலாளர் ராஜனின் மனைவி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலை வேந்தரான கவர்னரை அவமதித்ததாகக் கூறி, ஜீன் ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யுமாறு வழக்குத் தாரர் வெங்கடாச்சலபதி ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மாணவியின் செயல் ஏற்புடையதல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலை சட்டத்தில் வழிவகை உள்ளதா என்று தெரிவிக்க உத்தரவிடுகிறோம்” என்று கூறி, விசாரணையை டிசம்பர் 12க்கு ஒத்திவைத்தனர்.
ஜீன் ஜோசப்பின் கணவர் ராஜன், “இது அரசியல் சம்பந்தமானது அல்ல, கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம்” என்று கூறியுள்ளார். கவர்னர் ரவி, தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம், பல்கலை விழாக்களில் நடக்கும் நிகழ்வுகளை மீண்டும் விவாதிக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: “எடப்பாடி அல்ல, துதி பாடி” - இபிஎஸை மரண பங்கமாய் கலாய்த்த முன்னாள் அமைச்சர் பொன்முடி...!