கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
மதுரையில் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். கடந்த வாரம் திங்கட்கிழமை முட்புதர் மற்றும் குட்டை பகுதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும், விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!
இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மாணவனின் மரணம் தொடர்பாக “கொலையா? ஆணவப் படுகொலையா?” என்ற கேள்வியையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். மேலும், மாணவனின் உடல் பல நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையின் விசாரணை குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி சென்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. போராட்டத்தின் காரணமாக மதுரை அழகர்கோவில் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், விசாரணை அதிகாரியான உதவி ஆணையர் ரவிச்சந்திரனை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். மாணவன் தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்பதே தங்களது முக்கிய நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட மதுரை.. செப்.16, 17 உள்ளூர் விடுமுறை..!! பள்ளி, கல்லூரி தேர்வுகள் தள்ளிவைப்பு!!