மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! ஷாக்கில் ராமதாஸ்..!!
பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய பாமக நிறுவனர் ராமதாஸின் மனுவைத் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர், கொடி மற்றும் மாம்பழம் சின்னம் தொடர்பாக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்டகாலமாக சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அன்புமணி தரப்புக்கு ஆதரவாக முடிவெடுத்திருந்த நிலையில், சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று (மார்ச் 26) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமதாஸ் தரப்பின் மனுவில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். “ராமதாஸ் தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரை தலைவராக ஏற்கவில்லை.
மேலும், கட்சி அலுவலகம் இல்லாத நிலையில் தைலாபுரம் தோட்டத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளார். தேனாம்பேட்டை அலுவலகத்தை கட்சி அலுவலகமாக எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “சட்டமன்றத் தேர்தலுக்கான மாம்பழ சின்னம் ஏற்கெனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!
ராமதாஸ் தரப்பு பல உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளது” என்றும் வலியுறுத்தினார்.தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “2025 மே மாதம் பாமக சார்பில் சின்னம் கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே மாம்பழம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
ஆணையம் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்மபிரபு, “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை” என்று கூறி, மாம்பழ சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும், தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்கக் கோரிய கோரிக்கையையும் நிராகரித்தார்.
ராமதாஸ் தரப்பினருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தை நேரடியாக அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். இந்தத் தீர்ப்பு ராமதாஸுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாகவே முடிவுகளை வழங்கியுள்ளன. இதனால் அன்புமணி தரப்பு நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
பாமகவின் உட்கட்சி பிரச்சினை தொடர்பான இந்த சட்டப் போராட்டம், வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்பாட்டை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ராமதாஸ் தரப்பு மேலும் சட்ட வழிகளில் தொடர்ந்து போராடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு!