அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எஸ் பி வேலுமணி, துணைத்தலைவராக ஹரி , கொரடவாக விஜயபாஸ்கரை நியமிக்க 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்தை தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் வழங்கினர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த புகைச்சல் இன்று எரிமலையாக வெடித்துள்ளது. சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பினரும் தனித்தனியாகக் கடிதம் அளித்துள்ளதால், அதிமுக அதிகாரப்பூர்வமாகப் பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் திரண்ட 30 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், இன்று தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை நேரில் சந்தித்து அதிரடி கடிதம் ஒன்றை வழங்கினர். அதில் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக திரு. எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும். சட்டமன்றக் குழுத் துணைத் தலைவராக திரு. ஹரி அவர்களை நியமிக்க வேண்டும். சட்டமன்றக் குழுவின் கொறடாவாக (Whip) முன்னாள் அமைச்சர் திரு. சி. விஜயபாஸ்கரை அங்கீகரிக்க வேண்டும்.
என்று அந்த கடிதத்தில் 30 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன் மற்றும் தளவாய் சுந்தரம் தலைமையில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கக் கோரி ஆதரவுக் கடிதம் அளித்திருந்தனர். ஆனால், 47 எம்.எல்.ஏ-க்களில் 30 பேர் வேலுமணி பக்கம் சாய்ந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!
அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையானோர் (30 பேர்) வேலுமணியை ஆதரிப்பதால், சட்டசபை விதிகளின்படி அவரே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரே கட்சியின் பெயரில் இரண்டு வெவ்வேறு பட்டியல்கள் வழங்கப்பட்டுள்ளதால், தற்காலிக சபாநாயகர் கருப்பையா இது குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார். பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன்தான் உள்ளனர், எனவே எங்கள் தரப்பையே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனச் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த உச்சகட்ட அதிகாரப் போர் அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து அதிமுக மெல்ல மெல்ல நழுவி வருவதையே இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் - ஆளுநர் அர்லேகர் அதிரடி!