ஆந்திராவுக்கு கைமாறிய கப்பல் கட்டும் தளம்?! வெளியேறுகிறதா மசகான் டாக்! பெருமுதலீடு நழுவல்?!
துாத்துக்குடியில் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டிருந்த நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்', தனது முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டம் தமிழகத்தை விட்டு ஆந்திரப் பிரதேசத்திற்கு மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருப்பது தொழில் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முன்னணி பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், கடந்த ஆண்டு தமிழக அரசுடன் இணைந்து தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த திட்டத்தில் மசகான் டாக் நிறுவனம் மட்டும் ரூ.18,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனமும் இதில் பங்குதாரராக இணைந்திருந்தது. மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.30,000 கோடியாக இருக்கும் என்றும், 45,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனம் காத்திருந்த நிலையில், பின்னர் தமிழக அரசு தென்கொரியாவின் உலகப் புகழ்பெற்ற எச்.டி. ஹூண்டாய் நிறுவனத்துடன் தனி ஒப்பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் மையத்தை உருவாக்க சுமார் ரூ.33,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதையும் படிங்க: ஆந்திரா ராஜ்யசபா எம்.பி-யாகும் அண்ணாமலை! சொன்னதை செய்த அமித்ஷா! டெல்லியில் இருந்து வந்த ஓலை!
இதையடுத்து, மசகான் டாக் நிறுவனம் தனது திட்டம் தொடர்பாக அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்ற கருத்து நிறுவன வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், தூத்துக்குடி திட்டத்திலிருந்து விலகும் முடிவை மசகான் டாக் நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.29,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் மையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டம் தமிழகத்தில் இருந்து விலகினால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பெரிய அளவிலான தொழில் முதலீடுகளை மாநிலம் இழக்க நேரிடும் என்ற கவலை தொழில் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மசகான் டாக் அல்லது தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க: மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!