30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைத் தொகுப்பு..! தலைமைச் செயலகத்தில் விஜய் - வைகோ சந்திப்பு..!
முதலமைச்சர் விஜயை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, வைகோ தனது 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைகளைத் தொகுத்து வெளியிடும் புத்தக விழாவுக்கு முதலமைச்சரை அழைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. வைகோவின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் விஜய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிடவும், முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வைகோவின் தனிப்பட்ட கோரிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரமும் முக்கிய இடம் பெற்றது. வைகோ, ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரும் நிலையில், ஆலையைத் திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கமிஷன், கரெப்ஷன் போன்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை என்றும் வைகோ பாராட்டினார். முதலமைச்சர் விஜய் எளிமையாகவும், இயல்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "என் அரசியல் வாழ்க்கையின் பெருந்தவறு"... வைகோ ஓபன் டாக்..! திமுக மீது விமர்சனம்..!!
வைகோவின் நாடாளுமன்றப் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் இந்த புத்தகத் தொகுப்பு ஆறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளது. 30 ஆண்டுகால அவரது உரைகள் தமிழக அரசியல், சமூகப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியிருக்கும். முதலமைச்சர் விஜயின் பங்கேற்பு இந்த விழாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதிமுக எம்.எல்.ஏக்கள் விலை போய் விட்டார்கள்!! விஜய்க்கு அவசியமில்லை! பட்டென போட்டு உடைத்த துரை வைகோ!!