மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் டெல்டாவில் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையை எந்தவித தொலைநோக்குப் பார்வையும் திட்டமிடலும் இன்றி காலந்தாழ்த்தித் திறந்ததன் மூலம், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அடியோடு அழித்துவிட்ட தவெக அரசு, தற்போது போதிய நீர் இருப்பு இல்லாத சூழலில் சம்பா சாகுபடியையும் மிகப்பெரிய சூதாட்டமாக மாற்றி 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்த வழிவகுத்துள்ளது என முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சரும் திமுக முன்னணித் தலைவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் அணைகள் திறக்கப்பட்டு பாசன நீர் கடைமடை வரை தங்குதடையின்றி கொண்டு சேர்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால், ஜூன் முதல் செப்டம்பருக்குள் அறுவடை செய்யப்பட வேண்டிய குறுவைப் பருவ நெல் சாகுபடி முற்றிலுமாக பாழாகியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்கள் நீண்ட நாட்களாகக் காய்ந்து கிடப்பதால், தற்போது காலதாமதமாகத் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நிலத்திலேயே உறிஞ்சப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்குச் சென்றடைவதில் பெரும் காலதாமதம் ஏற்படும் எனவும், கால்வாய் நீர் வராததால் ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பிய விவசாயிகளும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் கடுமையான கடன் சுமையில் தத்தளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!
மேலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடி குறித்துக் கவலை தெரிவித்துள்ள அவர், ஒரு போக சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு வர 120 முதல் 140 நாட்கள் வரை தண்ணீர் தேவைப்படும் சூழலில், ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களின் தேவைக்கு சுமார் 205 டி.எம்.சி தண்ணீர் அவசியமாகிறது.
மேட்டூர் அணையில் தற்போது வெறும் 54 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், அரசு சம்பிரதாயத்திற்கு 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கத் திட்டமிட்டிருப்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். செப்டம்பர் மாதத்தில் சம்பா பணிகளைத் தாமதமாகத் தொடங்குவதால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு ஏற்படும் என வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்கள் முன்கூட்டியே தூர்வாரப்பட்டு நீர் ஆதாரங்கள் வலுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கர்நாடக அரசிடமிருந்து உரிய உபரி நீரைப் பெறத் துப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் சம்பா சாகுபடியின் தலைவிதி முற்றிலுமாகத் திசை தெரியாமல் போயுள்ளது எனவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழித்த இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!