×
 

தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

அரசியல் ரீதியாக இரு வேறு துருவங்களில் பயணிக்கும் ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனும், தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது எவ்வித தயக்கமும் இல்லாமல் சகஜமாக உரையாடியது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்று, அரசியல் களத்திலும் கவனம் பெற்றுள்ளது. ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றிருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

அரசியல் ரீதியாக இரு வேறு துருவங்களில் பயணிக்கும் ஸ்டாலினும் நயினார் நாகேந்திரனும், தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது எவ்வித தயக்கமும் இல்லாமல் சகஜமாக உரையாடியது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

மனோஜ் பாண்டியனைப் பொறுத்தவரை, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலின்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அந்த அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

திமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 69,170 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து ஆலங்குளம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஸ்டாலின் – நயினார் சந்திப்பு மட்டுமின்றி, அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தலைவர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளில் ஒருவரையொருவர் சந்தித்து நட்பு பாராட்டும் சம்பவங்கள் அரசியல் நாகரிகம் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு நிகழ்வு புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குநர் கவுதமன் மகள் திருமண விழாவில் அரங்கேறியது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அந்த திருமணத்தில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கு வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டனர்.

திமுகவை சீமான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நேரில் சந்தித்தபோது இரு தலைவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டது அப்போது அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டது.

அதேபோல், தற்போதைய திருமண விழாவில் ஸ்டாலின் மற்றும் நயினார் நாகேந்திரன் இடையேயான சந்திப்பும் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட நட்புறவின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share